கவிதை எழுதுபவன் கவியன்று. கவிதையே வாழ்க்கையாக உடையோன், 
வாழ்க்கையே கவிதையாகச் செய்தோன், அவனே கவி - பாரதி

  வல்லோன் வள்ளுவனுக்கு என் புதுக்கவிதைப் பூமாலை  
 

 
  01 அறத்துப்பால் - பாயிரவியல் - கடவுள் வாழ்த்து   
  02 அறத்துப்பால் - பாயிரவியல் - வான் சிறப்பு  
     
   
  01 அறத்துப்பால் - பாயிரவியல் - கடவுள் வாழ்த்து   
     
    தமிழுக்கு அகரம்போல் மண்ணில்
உயிருக்கு இறைவனே 
முதல்வன்

அனைத்தும் அறிந்த 
அவனடி தொழாதான் கல்வி 
வெறும் குப்பை

பூமனத்தில் பூத்திருக்கும் 
அவன் பாதம் பணியாமல் 
புகழென்பதோ எவர்க்கும் 
கிட்டாத முல்லை

விருப்பும் வெறுப்புமற்ற
அவனைப் பணிந்தாலோ
துன்பங்கள் வாழ்வில்
இல்லவே இல்லை

துயர்தரும் வினைகளெல்லாம்
தூரமாகி ஓடும்

ஐம்புலன்களையும்
அடக்கியாளும் தூயவனின்
அருமை வழிச் செல்வொரே
அகிலம் வெல்வர்

நிகரற்ற அவனின்
வழி செல்லா மாந்தரோ
துயரப் பிடியினிற் சிக்கியே
துருப்பிடிப்பர்

நீதிநெறியாளன் 
அவனை வணங்காமல் எவர்க்கும் 
இன்பமும் பொருளும் வெல்லும்
வல்லமையோ இல்லை

தலையிருந்தும் இல்லா மூடரே
இறைவனைத் தொழா மானிடர்

இவ்வுலக இன்னல்களில் மூழ்கியே 
கரைசேரும் வழியற்று
காணாதொழியும் பாவிகள்
 
     
  அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு
 
     
    அ என்ற
முதல் எழுத்தை 
முன்வைத்தே
மொழியின்
எழுத்துக்கள் எல்லாம்

ஆண்டவன் என்ற
முதல்வனை 
முன்வைத்தே
உலகின்
உயிர்கள் எல்லாம் 

 
     
  கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன்
நற்றாள் தொழாஅர் எனில்.
 
     
    ஆயிரமாய்க் கல்வி 
கற்றறிந்தே நல்ல 
காவியம் செய்தாலும்

அனைத்தும் அறிந்தவன்
பாதம் பணிந்திடும்
பண்பைப் பெறாதிருப்பின்

கற்றவை முற்றிலும்
வீணென்று அறிவீர்
வேறேது பயனுமில்லை 
 
     
  மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார்
நிலமிசை நீடுவாழ் வார்.
 
     
    பூப்போன்ற நெஞ்சங்களில்
பொழுதுக்கும் குடியிருக்கும்
புனிதனின் அடி தொட்டே

நாளெல்லாம் தொழுகின்ற
நல்லோர்கள் யாவரும்
நிலைபெற்ற புகழ்பெற்று
நெடுங்காலம் வாழ்வாரே
 
     
  வேண்டுதல் வேண்டாமை இலான்அடி சேர்ந்தார்க்கு
யாண்டும் இடும்பை இல.
 
     
    விருப்பற்றோனும்
துளியும் 
வெறுப்பற்றோனும்
ஆகிய 
நிகரற்றோன் 
திருவடிகளை

தினம் பற்றும் 
மனங்களை
ஒருக்கிலும்
பற்றாது துயரம் 
 
     
  இருள்சேர் இருவினையும் சேரா இறைவன்
பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு.
 
     
    அருளும் இறைவனின்
அனைத்துப் பெருமைகளையும்
அறிந்தே வாழ்வோரிடம்

அளவிலாத் துயர் தரும் 
அறியாமைச் செயல்கள்
எட்டியே நிற்கும் 
எப்போதும்
 
     
  பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்க
நெறிநின்றார் நீடுவாழ்வார்
 
     
    ஐம்புலன்களின்
ஆசை ஊற்றுகளை
அடக்கியாளும் 
உண்மை நெறியாளனின்
உயர் வழிச் செல்வோர்
ஆயுள் நீடித்தே
ஆயிரங்காலம்
அற்புதமாய் வாழ்வர் 
 
     
  தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க் கல்லால்
மனக்கவலை மாற்றல் அரிது
 
     
    தனக்கோர்
நிகரில்லாதவனைத்
தொழாதார் எவரும்
தம்மைத் தாக்கும்
துயர் துன்பம் 
எவற்றினின்றும்
தப்பும் வழி இல்லாதார் 
 
     
  அறவாழி அந்தணன் தாள் சேர்ந்தார்க்கு அல்லால்
பிறவாழி நீந்தல் அரிது
 
     
    அனைத்து நெறிகளின்
ஆழ்கடலாம்
அளவற்ற அருளாளனில்
அடிதொட்டுத் தொழாதார்

இன்பம் பொருள் என்ற
ஏனைய கடல்களில்
நீந்தும் வல்லமையை 
நிச்சயம் பெறமாட்டார் 
 
     
  கோளில் பொறியின் குணமிலவே எண்குணத்தான்
தாளை வணங்காத் தலை
 
     
    மேன்மைகள் அனைத்தையும்
முழுவதும் பெற்றவனின்
அடிதொட்டுத் தொழாதவன் 
காணும் கண்ணிருந்தும் 
குருடன்போல்
கேட்கும் காதிருந்தும் 
செவிடன்போல் 
சிந்திக்கத் தலையிருந்தும் 
மூடனாவான்
 
     
  பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்
இறைவன் அடிசேரா தார்
 
     
    அன்பொளிரும் இறைவனின்
அடிதேடித் தொழாதார் 
இன்னல்கள் எழுந்தாடும்
இவ்வுலக வாழ்வெனும்
பெருங்கடல் நீந்தியே
பேரின்ப கரைசேரும்
வல்லமை கொள்ளாது
மூழ்கியே அழிவர் 
 
   
  02 அறத்துப்பால் - பாயிரவியல் - வான் சிறப்பு  
     
    வான மழை மண்ணில் 
வீழாது போனால் 
வாழும் மனிதர்களோ 
எங்குமில்லை

உணவளிக்க 
உறுதுணை நிற்பதும்
நீராகவே 
உட்கொள்ளும் உயிருக்கு
உடனடி 
உணவாகிப் போவதும் 
மழையே 

முழுவதும் கடல் நீரே 
சூழ்ந்திருந்தபோதும்
மழையற்றுப் போனால் மக்கள் 
மாண்டுதான் போவர் 

உழுது வாழும் 
உழவர்ககளும் உழவிழப்பர் 

பெய்யாது ஓய்ந்து 
கொன்றுபோடுவதும்
அன்னமாய்ப் பொழிந்து 
அழியும் மக்களை
அரவணைப்பதும் 
அந்த வான மழைதான்

மழையின்றி பூமியில்
புற்களின் தலைகளும் 
புறப்படாது 

ஆழ்கடலும் கூட 
அடிவற்றியே போகும் 

விண்ணுலகத்தார்க்கு 
எடுக்கப்படும்
விழாக்களும் வைபவங்களும் 
விடுபட்டுப் போகும்

பிறர் வாழ 
வாரி வழங்கும் தானங்களும்
தாம் வாழத் 
தொடுக்கின்ற நோன்புகளும்
தடம்மாறிப் போகும் 

பண்பால் உயர்ந்தோரும் கூட 
தம் 
நற்குணங்கள் கெட்டே 
அழிவர் 
 
     
  வானின் றுலகம் வழங்கி வருதலால்
தானமிழ்தம் என்றுணரற் பாற்று
 
     
    வான மழை மண்ணில்
வீழாதிருப்பின் எங்கும்
வண்ண வண்ணப் பூக்களில்லை
வயல்வெளிகள் ஏதுமில்லை
உண்டு வாழும் உயிரினங்கள்
இல்லைவே இல்லை

உயிர்களுக்கெல்லாம்
உயிராய் விளங்கும் அந்த 
வானத்து நீர் மழையே
உயர் அமிழ்தமாம்
 
     
  துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத்
துப்பாய தூஉ மழை
 
     
    உண்ணும் உணவின்
உற்பத்திக்கு
உறுதுணையாகியும்

பருகும் உயிர்களுக்கு
உடனடி உணவாகத்
தானே ஆகியும்

உயர்களை வாழ்விக்கும்
உன்னதமே அந்த
வான மழையாம்
 
     
  விணின்று பொய்ப்பின் விரிநீர் வியனுலகத்து
உள்நின்று உடற்றும் பசி.
 
     
    வேண்டும் போதினிலே மழை 
மண்ணை முத்தமிடாது 
போனால்

நீராலேயே நிலம்
சூழப்பெற்றிருப்பினும்

உண்ண உணவின்றியே
உயிரினங்கள் யாவும்
ஒட்டுமொத்தமாய் 
அழிந்தேபோகும்
 
     
  ஏரின் உழாஅர் உழவர் புயலென்னும்
வாரி வளங்குன்றிக் கால்.
 
     
    வாரி வாரி வழங்கும் 
வள்ளல் பணியினை
வான மழைமட்டும்
விட்டுவிட்டால்

உழுது உழுது உண்ணும் 
உழவர்களோ
உயர் ஏர் பூட்டும் 
வாழ்விழந்தே 
வாடி வதங்குவர் 
 
     
  கெடுப்பதூஉங் கெட்டார்க்குச் சார்வாய்மற் றாங்கே
எடுப்பதூஉம் எல்லாம் மழை.
 
     
    மழைதான் மழைதான்

மண்மீது பொழியாமல்
மக்களை
மாய்த்துப் போடுவதும் 

மடிகின்றோர்
வறுமைத்தீ அணைக்க
வற்றாது பொழிந்து
வாழ்விப்பதும் 

மழைதான் மழைதான்
 
     
  விசும்பின் துளிவீழின் அல்லால்மற் றாங்கே
பசும்புல் தலைகாண்பு அரிது.
 
     
    விண்ணின் மழைத்துளி
மண்ணில் விழாமல்
ஒரு 
பச்சைப் பசும் புல்லின்
தலையினைக் காண்பதும்
நிலத்தின் மடிகளில்
நிகழாது ஒருபோதும் 
 
     
  நெடுங்கடலும் தன்நீர்மை குன்றும் தடிந்தெழிலி
தான்நல்கா தாகி விடின்.
 
     
    ஆழ்கடலும்
அடிவற்றியே அழியும் 
அதன் 
நீரள்ளிச் செல்லும் 
நீலமேகங்கள்
அதன் மீதும் வந்துநின்று
பொழியாமல் போனால்
 
     
  சிறப்பொடு பூசனை செல்லாது வானம்
வறக்குமேல் வானோர்க்கும் ஈண்டு.
 
     
    வான மேகங்கள்
மண்நோக்கி விழுகின்ற
வைபவம் நிறுத்திவிட்டால்

மண் வாழும் உழவர்கள்
விண் வாழும் மேலோர்க்கு
விரும்பிச் செய்கின்ற
விழாக்களும் பெருமைகளும்
வழக்கற்றே ஓய்ந்துபோகும்
 
     
  தானம் தவமிரண்டும் தங்கா வியனுலகம்
வானம் வழங்கா தெனின்
 
     
    மண்ணுக்கு வானம்
மழைநீர் வார்க்கும்
மகோன்னதம்
மாறிப் போனால்

பிறர் வாழ
வாரி வழங்கும் ஈகையும்
தாம் வாழ
தொடுக்கின்ற நோன்பும்
முற்றாகவே மண்ணில்
முடியாமல் போய்விடும்
 
     
  நீர்இன்று அமையாது உலகுஎனின் யார்யார்க்கும்
வான்இன்று அமையாது ஒழுக்கு.
 
     
    மேகங்கள் பொழியும்
மழைநீர் இன்றி
எந்த வாழ்வும் 
இல்லை என்பதால்

நல்ல உயர்ந்தோரும் கூட
மண்ணில்
நற்குணங்கள் கெட்டே 
சரிவர் 
 
     
 

மேலே செல்ல